ஒரத்தநாடு வட்டம், வாட்டாத்திக்கோட்டை அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி ரூ. 1.22 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வாட்டாத்திக்கோட்டை காவல் சரகம், கழுகப்புளிக்காடு ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையில் நடுவிக்கோட்டையை சேர்ந்த சோ. பெருமாள் என்பவர் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சனிக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு அலிவலம் வழியாக நடுவிக்கோட்டைக்கு தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை வழிமறித்த மர்ம நபர்கள் அவரை தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு தப்பியோடிவிட்டனர். அந்த வாகனத்தில் டாஸ்மாக் விற்பனை பணம் ரூ 1.22 லட்சம் இருந்துள்ளது. பலத்த காயத்துடன் சாலையில் கிடந்த பெருமாளை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமணையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், வாட்டாத்திக்கோட்டை போலீஸார் விசாரிக்கின்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அலிவலம் -அறந்தாங்கி செல்லும் சாலையில் நரியாறு அருகே கிடந்த பெருமாளின் இரு சக்கர வாகனத்தை போலீஸார் கைப்பற்றினர்.
மற்றொரு சம்பவம்: வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்துக்குள்பட்ட உதயசூரியபுரம் கடைத்தெருவில் அந்தோனிசாமி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் மேற்கூரையை உடைத்து, கடையிலிருந்த சிகரெட் பாக்கெட், மற்றும் பீடி பண்டல்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். புகாரின்பேரில், வாட்டாத்திக்கோட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.