கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இந்த இயக்கத்தின் மாதாந்திரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கஜா புயல் நிவாரணப் பணியில் தம் உயிரைப் பணயமாக வைத்து பணியாற்றி வரும் மின் துறை ஊழியர்களுக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் மின் இணைப்பு வேலைகள் நடைபெறுகிறது. இன்னும் இருண்டு கிடக்கும் கிராமப்புற மக்களுக்கு மின் வசதி கிடைக்கப் பணியை விரைவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கஜா புயலின் பாதிப்புக்கு ஆளான தென்னை, மா, பலா, முந்திரி, வாழை, சவுக்கு போன்றவற்றுக்கு இழப்பீடுகளை நியாயமான அளவில் கணக்கிட்டு வழங்க வேண்டும். மேலும், பேரிடர் பகுதிகளாக மத்திய அரசு ஏற்று உரிய உதவிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இயக்கத்தின் மாவட்டத் தலைவர் கோ. அன்பரசன் தலைமை வகித்தார்.
செயலர் ஆதி. நெடுஞ்செழியன், அமைப்பாளர் மு. செல்வராஜ், தஞ்சை ராமதாஸ், பாவலர் தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.