கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 இடங்களில் டிச. 18-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இக்கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைத் தேசிய பேரிடர் பாதிப்புப் பகுதியாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசுக் கோரிய நிவாரணத் தொகையான ரூ. 15,000 கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடிசை, ஓடு, தொகுப்பு வீடுகள் அனைத்துக்கும் மற்றும் சேதமடைந்த மாடி வீடுகளுக்கும் முழு நிவாரணம் வழங்க வேண்டும். நெற்பயிருக்கு ஏக்கருக்கு 25,000 ரூபாயும், வாழைக்கு ஏக்கருக்கு ரூ. 1 லட்சமும், கரும்புக்கு ஏக்கருக்கு ரூ. 2 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும்.
தென்னை மரம் ஒன்றுக்கு ரூ. 20,000, மாமரம் ஒன்றுக்கு ரூ. 10,000, பலா மரம் ஒன்றுக்கு ரூ. 20,000, முந்திரி மரம் ஒன்றுக்கு ரூ. 10,000, எலுமிச்சை செடி ஒன்றுக்கு ரூ. 5,000, தேக்கு கன்று ஒன்றுக்கு ரூ. 3,000 வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குப் படகுகள், வலைகளைப் புதிதாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் டிச. 18-ம் தேதி நூறு இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்துக்கு சி. பக்கிரிசாமி தலைமை வகித்தார். தேசியக் குழு உறுப்பினர் கோ. பழனிசாமி, மாவட்டச் செயலர் மு.அ. பாரதி, மாநிலக்குழு உறுப்பினர் இரா. திருஞானம், மாவட்ட துணைச் செயலர்கள் வீ. கல்யாணசுந்தரம், பி. காசிநாதன், பொருளாளர் ந. பாலசுப்பிரமணியன், பா. பாலசுந்தரம், ஜி. கிருஷ்ணன், சி. சந்திரகுமார், ஆர். தில்லைவனம், ம. விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.