கும்பகோணத்தில் வாகன தணிக்கையின்போது போலீஸார் மீது கார் ஏற்றி கொல்ல முயன்ற இருவரை 7 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கும்பகோணத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு கும்பகோணம் டிஎஸ்பியாக இருந்த இளங்கோவன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளராக இருந்த பாலசுப்பிரமணியம் மற்றும் போலீஸார் கும்பகோணம் மேம்பாலம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சொகுசு காரை மறித்து சோதனை செய்தனர்.
காரில் 200 வெளிமாநில மதுபாட்டில்கள் இருப்பது போலீஸாருக்கு தெரிந்தவுடன், காரில் வந்த இருவரும் போலீஸாரின் கவனத்தை திசைதிருப்பி இறங்குவதுபோல் நடித்து, பின்னர் அதே வாகனத்தைக் கொண்டு போலீஸார் மீது மோதி விட்டு காருடன் தப்பியோடினர்.
இதில் டிஎஸ்பி இளங்கோவனுக்கும், ஆய்வாளர் பாலசுப்பிரமணியத்துக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதாகவும், வெளிமாநில மதுபாட்டில்களை கடத்தியதாகவும் கும்பகோணம் மேற்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், அய்யம்பேட்டையை அடுத்த அகரமாங்குடியை சேர்ந்த சு. சதீஷ்குமார் (42), ச. ஆனந்த் (31) ஆகிய இருவர்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது என்பது தெரியவந்ததை அடுத்து, மேற்கண்ட இருவரையும் பல ஆண்டுகளாக போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், அகரமாங்குடியில் இருவரும் அவர்களது வீட்டில் உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து கும்பகோணம் போலீஸார் அங்கு சென்று சதீஷ்குமார், ஆனந்த் ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.