கோயில்களில் தீ விபத்து சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டி கும்பகோணம் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வியாழக்கிழமை செந்தூரக் காப்பு சாத்தப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
கும்பகோணம் பாலக்கரை காமராஜ் நகர் அருகிலுள்ள இக்கோயிலில் வறட்சி நீங்கி நீர்வளம் வேண்டியும், உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டியும், அமாவாசையை முன்னிட்டும், கோயில்களில் தொடர்ந்து தீவிபத்து சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் ஆஞ்சநேயருக்கு செந்தூரக் காப்பு சாத்தப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. வழிபாட்டில் 1008 ராம நாம ஜபம், அகண்டபாராயணம், சகஸ்ர நாம அர்ச்சனை, திரிசத அர்ச்சனைகளும் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்து வழிபட்டனர். மேலும், பல பக்தர்கள் நேர்த்திக்கடனாக மட்டை தேங்காய்களை ஆஞ்சநேயர் காலடியில் வைத்து வழிபட்டனர். பக்தர்களுக்கு ராமன், மோகன் பட்டாச்சாரியார்கள் அருள் பிரசாதம் வழங்கினர்.