பாபநாசம் அருகே பணத்தை திருடிவிட்டு, வீட்டுக்கு தீவைத்த நபரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
அகரமாங்குடி கிராமம் மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் டேனியல் கூலி தொழிலாளி. இவரது மனைவி எலிசபெத்ராணி (52).
டேனியல் வீட்டை பூட்டிவிட்டு அ ருகிலுள்ள மாதாகோவிலுக்கு சென்றிருந்தாராம். பின்னர் வந்து பார்த்தபோது அவரது வீடு தீப்பற்றி எரிந்து சேதமடைந்திருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், அய்யம்பேட்டை போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே போலீஸார் ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அகரமாங்குடி மாதாகோவில் தெருவை சேர்ந்த சின்னப்பர் (47) என்பதும், டேனியல் வீட்டினுள் நுழைந்து வீட்டிலிருந்த ரூ. 40 ஆயிரம் பணத்தை திருடிவிட்டு, பிறகு வீட்டுக்கு தீவைத்துவிட்டு சென்றதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து சின்னப்பரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து ரூ. 40 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.