காரைக்குடி - திருவாரூர் இடையே 147 கி.மீ. தொலைவுக்கு ரூ. 711 கோடி செலவில் அகல ரயில் பாதை அமைத்தல் மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், அதிரை ரயில் நிலையத்தில் கட்டுமானப்பணிகள் கடந்த 3.7.2017 -ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சுமார் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலையம், 420 மீட்டர் நீளத்தில் நடைமேடை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை கட்டடம், டிக்கெட் கவுண்டர், பயணிகள் ஓய்வறை என அனைத்து வசதிகள் கொண்ட புதிய ரயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில் 50 டன் இரும்பைக் கொண்டு மேற்கூரை அமைக்கும் பணிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலைய மேற்கூரை, 1 மற்றும் 2-வது நடைமேடைகளை இணைக்கும் படிக்கட்டு நடைமேடைக்கான மேற்கூரை, 2-வது பிளாட் பாரத்தில் தலா 32 மீட்டர் நீளத்தில் 4 மேற்கூரைகள், முதல் பிளாட் பாரத்தில் தலா 32 மீட்டர் நீளத்தில் 3 மேற்கூரைகள் அமைக்கப்படவுள்ளன. இதற்காக 15 ஊழியர்கள் வெல்டிங் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வரும் மார்ச் 2-வது வாரத்தில் இப்பணிகள் அனைத்தும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.