பேராவூரணி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை ஆட்சியர் ஆ.அண்ணாதுரை திடீர் ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வின்போது, மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த காய்ச்சல் நோயாளிகளை நலம் விசாரித்து, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், மருத்துவமனை கழிவறைகள், ஆண்கள், பெண்கள் வார்டு ஆகியவற்றை ஆய்வு செய்த ஆட்சியர், சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்குமாறு மருத்துவ அலுவலர்களை அறிவுறுத்தினார். அங்கிருந்த பயன்படுத்தப்படாத கிணற்றில் கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்ட ஆட்சியர், இதுபோல் மீண்டும் மருத்துவக் கழிவுகளை கொட்டினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்படுவர் என எச்சரித்தார் .பேராவூரணி வட்டாட்சியர் பாஸ்கரன், மருத்துவ அலுவலர்கள் வெங்கடேசன், சினேகா பிரியதர்சினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி துறை, வருவாய் துறை, மற்றும் சுகாதாரத் துறையினர் ஆய்வின்போது உடனிருந்தனர்.