பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிகாய்) சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எல்ஐசி முகவர்களின் மெடிக்கிளைம் பாலிசிக்கான பிரீமியம் பிடித்தம் செய்யப்பட்டு உரிய மருத்துவ காப்பீட்டுத் துறைக்கு செலுத்தப்பட வேண்டும். ஆனால், பிரீமியம் பிடித்தம் செய்யப்பட்டும் கூட, உரிய முறையில் அது பராமரிக்கப்படாததால் மருத்துவ சிகிச்சைப் பெற வேண்டிய நிலையில் உள்ள பல முகவர்களுக்கு உரிய காப்பீடு கிடைக்கவில்லை.
மேலும், சொந்தப் பொறுப்பில் மருத்துவ சிகிச்சைப் பெற்ற பின்னர் அத்தொகையை இத்திட்டத்தின் கீழ் ரீ-இம்ப்ர்ஸ்மெண்ட் செய்யவும் முடியவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான முகவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இப்பிரச்னை குறித்து எல்ஐசி நிர்வாகத்துக்கு கொண்டு சென்ற பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, முகவர்களுக்கான மெடிக்கிளைம் பிரீமியம் பிடித்தம் செய்தும், அதை முறையாக பராமரிக்காத எல்ஐசி நிர்வாகத்தைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை எல்ஐசி கிளை அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு லிகாய் அமைப்பின் கிளைத் தலைவர் எம்.சுந்தரராஜன் தலைமை வகித்தார். மாநில செயல் தலைவர் அ.பூவலிங்கம் கண்டன உரையாற்றினார். கிளைச் செயலர் எம்.வீரமணி, பொருளாளர் கே.மணவாளன் மற்றும் முகவர்கள் பங்கேற்றனர். முடிவில், எல்ஐசி
கிளை மேலாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.