தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கும்போது தகுதி, திறன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, முன்னுரிமையைப் பின்பற்றாமல் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. எனவே, முன்னுரிமைப்படி பதவி உயர்வு வழங்க வேண்டும். தகுதி, திறன் என்ற வார்த்தையை நீக்க வேண்டும். இரண்டாம் கட்ட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். ஆசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். நீட் பயிற்சி வகுப்புகளுக்கு முதுகலை ஆசிரியர்களை நியமிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கழகத்தின் மாவட்டத் தலைவர் சி. சந்திரசேகர் தலைமை வகித்தார். தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலர் எம். ரவிச்சந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஏ. ரெங்கசாமி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட அமைப்புச் செயலர் எம். சச்சிதானந்தம், பொருளாளர் ஜி. இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.