தங்க இழையிலான ஓவியங்கள் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் கும்பகோணம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே பூண்டி பஜனைமடத்தில் தங்க இழையிலான பழைமையான இரு நடராஜர் ஓவியங்கள் 2017ஆம் ஆண்டு திருடு போனது. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, திருக்கோவிலூர் அருகே சங்கராபுரம் பிரதான வடக்கு தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (32), கடலூர் மாவட்டம், மேபட்டாம்பாக்கம் கக்கன் காலனியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (23) ஆகியோரைக் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய விழுப்புரம் மாவட்டம் , மாம்பலாப்பட்டு சாலையைச் சேர்ந்த சித்திரகனி மகன் பழனிசாமியை(27) சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த வியாழக்கிழமை (அக்.11) கைது செய்தனர். கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட பழனிசாமியை அக்.26ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.