மதுக்கூர் ஒன்றியம், பாவாஜிக்கோட்டை கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பண்ணை இயந்திரமயமாக்கல் குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மதுக்கூர் வட்டாரத்தைச் சேர்ந்த 40 விவசாயிகள் பங்கேற்றனர்.
முகாமுக்கு மதுக்கூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் வை.தயாளன் தலைமை வகித்துப் பேசுகையில், தற்போது வேளாண் பணிகளில் நிலவி வரும் வேலையாள் பற்றாக்குறையைப் போக்க பண்ணை இயந்திரங்கள் பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
அடுத்து, உதவி வேளாண் பொறியாளர் சேகர், நெல் நடவுப் பணிக்கு முன் வரப்பை செதுக்கி சேறு பூசும் கருவியின் பயன்பாடு குறித்து பாவாஜிக்கோட்டை கலைச்செல்வி என்பவர் வயலில் நேரடி செயல்விளக்கம் செய்து காட்டி, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். மேலும், இப்பகுதியில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் குழுக்களாக செயல்பட்டு, வரப்பை செதுக்கி சேறு பூசும் கருவியைப் பயன்படுத்தி வேலையாட்கள் மூலம் ஏற்படும் செலவுகளைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தினார்.
மதுக்கூர் வட்டார வேளாண்மை துணை அலுவலர் கலைச்செல்வன், உதவி வேளாண்மை அலுவலர் நாராயணசாமி ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் லீலா, சரவணி, பெனிக்சன் ஆகியோர் செய்திருந்தனர். மதுக்கூர் வட்டார வேளாண்மை அலுவலர் நவீன் சேவியர் வரவேற்றார். கீழக்குறிச்சி உதவி வேளாண்மை அலுவலர் ஜெரால்டு ஞானராஜ் நன்றி கூறினார்.