தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இடுப்பு அறுவை சிகிச்சை கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரியின் உடற்கூறுவியல் துறை, திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு தலைமை வகித்த கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் பேசியது: தமிழகத்தில் முதல் முறையாகப் பயிற்சி மருத்துவர்களுக்காக இக்கருத்தரங்கம் நடத்தப்பட்டுள்ளது. இதில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட 5 மனித சடலங்களில் இடுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதை மருத்துவ மாணவர்கள் பார்த்து பயன் பெறுவர். விபத்தில் இடுப்புக்கு கீழ் பகுதியில் அடிபட்டால், எவ்வாறு அறுவை சிகிச்சை செய்து, பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவது என்பதே இச்சிகிச்சையின் நோக்கம். விபத்தில் கை, காலில் பாதிப்பு ஏற்பட்டால், அறுவை சிகிச்சை செய்வது எளிது. ஆனால், இடுப்புக்குக் கீழ் பாதிக்கப்பட்டால் அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றுவது மிகவும் கடினம்.
இதற்கு மருத்துவ மாணவர்களை முழுமையாகத் தயார் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த அறுவை சிகிச்சையை அனுபவம் உள்ள மருத்துவர்களைக் கொண்டு செய்து காட்டப்படுகிறது.இதில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 60க்கும் அதிகமான சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டனர் என்றார் அவர்.