பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் உள்ள அருள்மிகு தவளவெண்ணகை அம்மன் உடனுறை பாலைவனநாதர் கோயிலில் பிரதோஷ விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவை யொட்டி கோயிலில் உள்ள மூலவர் பாலைவனநாதர், தவளவெண்ணகை அம்மன், வினாயகர், முருகர் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, கோயில் வெளி சுற்று பிரகாரத்தில் உள்ள நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து நெய்வேத்ய வழிபாடுகள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியம் பெருமானுக்கு பொங்கல் வைத்து, அருகம்புல் மாலை அணிவித்து, நெய் விளக்கேற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
அதேபோல, நல்லூர் அருள்மிகு கிரிசுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வர் கோயில், பாபநாசம் 108 சிவாலயம் என அழைக்கப்படும் அருள்மிகு பர்வதவர்தினி அம்மன் உடனுறை அருள்மிகு ராமலிங்க சுவாமி கோயில், உத்தாணி அருள்மிகு ஐராவதேஸ்வரர் கோயில், தேவராயன்பேட்டை அருள்மிகு சுகந்தகுந்தளாம்பிகை அம்மன் உடனுறை அருள்மிகு மச்சபுரீஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் சனி மகா பிரதோஷ விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.