தஞ்சாவூர் அருகே ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சத்துணவு அமைப்பாளரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சை அருகே வாண்டையார் இருப்பு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆ. ரவிச்சந்திரன் (51). அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார்.
அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் 9 வயது மாணவி, கடந்த 21 ஆம் தேதி பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, கைகளை கழுவ சத்துணவு கூடத்தில் உள்ள பம்பிற்கு சென்றுள்ளார். அப்போது சத்துணவு அமைப்பாளர் அந்த மாணவியை சமையல் அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, அழுதுகொண்டே நடந்தவற்றை தலைமையாசிரியரிடம் கூறியுள்ளார். இதையறிந்த சத்துணவு அமைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமறைவாகிவிட்டார்.
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம், மாணவியின் பெற்றோரிடம் தெரிவிக்க, பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சனிக்கிழமை இரவு புகாரளித்தனர்.
போக்ஸோ கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவான ரவிச்சந்திரனை தேடி வந்தனர். இந்நிலையில், ரவிச்சந்திரனை ஞாயிற்றுக்கிழமை காலை போலீஸார் கைது செய்தனர்.
ரவிச்சந்திரனுக்கு வங்கியில் பணியாற்றும் மகள் ஒருவரும், கல்லூரியில் படிக்கும் இரு மகன்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.