தஞ்சாவூரில் குடிநீர் பிரச்னையை கண்டித்து பொதுமக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி அருகே உள்ள செங்கமலநாச்சியார் அம்மன் கோயில் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு 6 மாதங்களாகக் குடிநீர் வருவதில்லை என குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் குந்தவை நாச்சியார் அரசுக் கல்லூரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த தெற்கு போலீஸார் மற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதேபோல, நாள்தோறும் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பணியாளர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.