பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை விரைவாக முடிக்க வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1992 ஆம் ஆண்டு பாசிச, மதவெறியுடன், தேச நலனைப் பாதிக்கும் வகையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கை உடனடியாக முடிக்க வேண்டும்.
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தற்காலிக வழிபாட்டு அமைப்பை அகற்ற வேண்டும். வாக்குறுதிப்படி மீண்டும் பாபர் மசூதியை அதே இடத்தில் கட்ட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ். பைசல் முகம்மது தலைமை வகித்தார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநிலச் செயலர் ஏ. முகைதீன் அப்துல்காதர், எஸ்.டி.டி.யு தொழிற் சங்க மாநிலச் செயலர் எம்.ஒய்.எஸ். அப்துல் காதர், தமுமுக மாவட்டத் துணைச் செயலர் எஸ்.ஏ. ரியாஸ் அகமது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மைய மாவட்டச் செயலர் எஸ். சொக்கா ரவி, மதிமுக விடுதலைவேந்தன், அமமுக வழக்குரைஞர் அணி மாவட்டச் செயலர் அ. நல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்: இதேபோல, கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன் இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், பாபர் மசூதி இடத்தை முழுமையாக முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும். இடித்த குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
மாவட்டத் தலைவர் குடந்தை ஜாபர் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் இஸ்மாயில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில மாணவர் சங்கத் தலைவர் பிரகாஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகரச் செயலர் கலையரசன், மே 17 இயக்க மாவட்ட அமைப்பாளர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.