தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற விரைவு சைக்கிள் போட்டியில் ஏறத்தாழ 350 பேர் கலந்து கொண்டனர்.
இப்போட்டி 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தொலைவுக்கும், 15 மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தொலைவுக்கும், 13 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ. தொலைவுக்கும், 15 மற்றும் 17 வயதுக்குபட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவுக்கும் நடத்தப்பட்டது. இதில், மாணவர்கள் 180 பேரும், மாணவிகள் 168 பேரும் என மொத்தம் 348 பேர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியை முதன்மை சார்பு நீதிபதி ஆர். மாலதி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மு. தேன்மதி தொடங்கி வைத்தனர். இதில், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு, சான்றிதழும், நான்காமிடம் முதல் பத்தாமிடம் வரை பெற்றவர்களுக்குச் சான்றிதழும் வழங்கப்பட்டன. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் க. பாபு, பளுதூக்குதல் பயிற்றுநர் து. செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.