சிம்லாவில் ஆக. 20-ஆம் தேதி தொடங்கப்படவுள்ள தேசிய அளவிலான உறைவாள் போட்டிக்கு தமிழகத்திலிருந்து 50 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இமாசல பிரதேச தலைநகர் சிம்லாவில் தேசிய அளவிலான ஆக. 20-லிருந்து 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 20-வது உறைவாள் போட்டியில் பங்கேற்க ஒவ்வொரு மாநிலத்திலும் முதல் மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதன்படி தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்கக்கூடிய மாணவர்களைத் தேர்வு செய்யும் போட்டி தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கன்னியாகுமரி, விருதுநகர், நாமக்கல், தருமபுரி, அரியலூர், திருச்சி, தேனி, ராமநாதபுரம் உள்பட 12 மாவட்டங்களைச் சேர்ந்த 175 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில், 11 வயதுக்குட்பட்டோர், 14 வயதுக்குட்பட்டோர், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடைபெற்ற போட்டிகளில் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளி தாளாளர் அ. கார்த்திகேயன் வழங்கினார். 50 மாணவர்களும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.