பாபநாசம் அருகே கொள்ளிடம் ஆற்றில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட அரசு மணல் குவாரியில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என கோரி செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
பாபநாசம் வட்டம், தேவனோடை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் செவ்வாய்க்கிழமை அரசு மணல் குவாரி திறக்கப்பட்டது. இங்கு மாட்டு வண்டிகளும் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத் தலைவரும் டி.ஐ.சி.யூ. மாவட்ட செயலாளருமான சி. ஜெயபால் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் குவாரியை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாபநாசம் வட்டாட்சியர் கண்ணன், பொதுப் பணித் துறை நிர்வாக பொறியாளர் மற்றும் காவல் துறையினர்
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், வெள்ளிக்கிழமை கும்பகோணம் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி மாட்டு வண்டிகளும் மணல் அள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.