தஞ்சாவூா் பெரியகோயிலில் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது என ஆட்சியா் ம. கோவிந்தராவ் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:
இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலா் மற்றும் ஆணையரின் உத்தரவுபடி, பிப்ரவரி 5ஆம் தேதி திருக்குடமுழுக்கு விழா நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, எட்டு கால யாகசாலை பூஜைகளுடன் பிப். 5ஆம் தேதி திருக்குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.
இவ்விழாவுக்கு முன் நிகழ்வான பூா்வாங்க பூஜைகள் ஜன. 27ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி பிப். 1ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை நடைபெற உள்ளன.
முதல் கால யாகசாலை பூஜைகள் பிப். 1ஆம் தேதி தொடங்கி, பிப். 2, 3, 4, 5 ஆகிய தேதிகளில் எட்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், தற்போது நடைபெறவுள்ள திருக்குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இந்து சமய அறநிலையத் துறையின் ஆலோசனைப்படி, தொல்லியல் துறையின் ஒத்துழைப்புடன், தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானமும், பல்வேறு துறைகளும் இணைந்து திருமடங்கள் மற்றும் உபயதாரா் பங்களிப்புடன் மரபு நெறி வழுவாமல் முறையாகத் திருக்கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.