ஊராட்சி சபைக் கூட்டத்தை நாடகம்போல திமுக தலைவர் ஸ்டாலின் நடத்துகிறார் என்றார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம்.
இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது:
கிராம சபைக் கூட்டம் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரும் கிராமத்துக்குச் சென்று அடிப்படை தேவைகளைக் கேட்டு அவற்றை நிறைவு செய்தனர். இன்னும் 3 மாதத்தில் தேர்தல் வர உள்ளது. அதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு நாடகம் போல் ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பரிசு பெற்று பயன்பெற வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 1.40 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொருவரும் பயன்பெற எந்தெந்த வகையில் உதவி செய்ய முடியுமோ? அந்தந்த வகையில் ஆய்வு செய்து தமிழக அரசு இந்த மக்களுக்கு சிறிதளவும் துன்பம் வராமல், செய்ய வேண்டிய பணிகளை செய்து வருகிறது. சில நேரங்களில் நிதி நிலைக்கு ஏற்ப மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை இந்த அரசு செய்யும் என்றார் வைத்திலிங்கம்.