தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கஜா புயலால் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாததால் வருவாய் இல்லை. இதனால், வாழவும் வழியில்லை. எனவே, பதிவு பெற்ற டெல்டா மாவட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு முதல் கட்டமாகத் தமிழக அரசு ரூ. 10,000 வழங்க வேண்டும். மேலும், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் கே. ரவி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் நா. பெரியசாமி, ஏஐடியுசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார், மாவட்டச் செயலர் ஆர். தில்லைவனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.