திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் திருவள்ளுவர் தினமான புதன்கிழமை வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு தேநீரை வழங்கியுள்ளார் தேநீரக உரிமையாளர்.
70 வயது உடைய தங்கவேலனார் திருக்குறள் ஆர்வலரும் கூட. பேராவூரணி பேருந்து நிலையம் அருகில் தேநீரகம் நடத்தி வரும், இவர் ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கி வருவதைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி, திருவள்ளுவர் தினமான, புதன்கிழமை மட்டும் ஆயிரக்கணக்கானோருக்கு ஒரு ரூபாய்க்கு தங்கவேலனார் தேநீர் வழங்கினார்.
இதுகுறித்து அவர் கூறியது:
உலகப் பொது மறையாம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 20 ஆண்டுகளாக திருவள்ளுவர் தினத்தன்று ஒரு ரூபாய் விலையில் தேநீர் வழங்கி வருகிறேன்.
புதன்கிழமை மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தேநீர் வழங்கினேன். கடந்த 20 ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு ஒரு ரூபாய் என்ற விலையில் தேநீர் விற்பனை செய்துள்ளேன்.
ஒவ்வொரு ஆண்டும் தேநீர் குவளைகளை கழுவுவதில் சிரமம் இருப்பதால் பேப்பர் கப் மூலமாக வழங்கி வந்தேன். நிகழாண்டில், நெகிழியை தமிழக அரசு தடை செய்திருப்பதால் எவர்சில்வர் குவளையில் தேனீர் வழங்கினேன் என்றார்.
திருக்குறள் ஆர்வலரான இவர் முறையாக பள்ளி சென்று கல்வி கற்கவில்லை என்றாலும்கூட அனுபவத்தின் மூலமாக பல்வேறு நூல்களைப் படித்து புலமை பெற்றுள்ளார். கடை முன்பு கரும்பலகையில் திருக்குறளை எழுதி, அவற்றின் பொருள் விளக்கத்தையும் எழுதுவதையும் தங்கவேலனார் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.