தஞ்சாவூரில் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 20 டன் பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அலுவலர்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை மற்றும் பதுக்கலை கண்காணிப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு குழுவிலும் 6 துப்புரவு ஆய்வாளர்கள், 15 பணியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வடக்கு அலங்கம் பகுதியில் ஒரு கிடங்கில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலகத்துக்கு புதன்கிழமை புகார் வந்தது. இதையடுத்து, மாநகராட்சி அலுவலர்கள் நிகழ்விடத்துக்குச் சென்று பூட்டியிருந்த கிடங்கின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது, அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மூட்டை மூட்டையாகக் கட்டி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, கிடங்கில் இருந்த 20 டன் பிளாஸ்டிக் பொருட்களை அலுவலர்கள் பறிமுதல் செய்து, லாரி மூலம் உரக்கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பிளாஸ்டிக் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த கிடங்கு உரிமையாளருக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.