தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஜாமிஆ மஸ்ஜித் பெரிய பள்ளிவாசலில் மழை பெய்ய வேண்டி சிறப்பு தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது.
அண்மைக்காலமாக பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்கள் நீரின்றி வற்றிப் போயுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. இதையடுத்து, பருவமழை பெய்ய வேண்டி ஆங்காங்கே உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகளும், பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, மதுக்கூர் ஜாமிஆ மஸ்ஜித் பெரிய பள்ளிவாசலில்
நடைபெற்ற சிறப்பு தொழுகைக்கு பள்ளிவாசல் இமாம் அப்துல் ரப் தலைமை வகித்தார்.
இதில் ஜமாத் தலைவர் முகைதீன் மரைக்காயர், செயலாளர் ஷேக் அலாவுதீன், கமிட்டி உறுப்பினர்கள் உருட்டி ஜின்னா, என்ஜீனியர் இத்ரீஸ், எஸ்.என்.எஸ். ஹாஜா, அப்துல் வாஹிது, லக்கி காதர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டு, நாட்டில் பருவ மழை பெய்து, வறட்சி நீங்கி, மக்கள் சிறப்புடன் வாழ வேண்டுமென பிரார்த்தனை செய்தனர்.