ஒரத்தநாடு அருகே விவசாயி வீட்டில் 20 பவுன் நகை, ஒன்றரை லட்சத்தை திருடி சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஒரத்தநாடு அருகே கிளாமங்கலம் குஞ்சான் தெருவை சேர்ந்த துரைசாமி மகன் முத்தையன் (50). விவசாயி. இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை வீட்டை பூட்டிவிட்டு, அருகேயுள்ள தங்களது வயலுக்கு சென்றுவிட்டு பிற்பகலில் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது, வீடு திறந்து கிடந்தது. வீட்டினுள் சென்று பார்த்தபோது, வீட்டிலிருந்த 20 பவுன் நகை, ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து முத்தையன் அளித்த புகாரின்பேரில், பாப்பாநாடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இதனிடையே, சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.