தேர்தல் பணிக்கு ஓய்வு பெற்ற காவல்துறையினர், முன்னாள் ராணுவத்தினர் தங்களது பெயரை மாவட்டக் காவல் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன் தெரிவித்திருப்பது:
மக்களவைத் தேர்தல் மற்றும் தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் ஏப். 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பணி செய்ய விருப்பமுள்ள ஓய்வு பெற்ற காவல் துறையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் தங்களது பெயரை மாவட்டக் காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாக வந்து பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவு செய்து, பணிக்கு நியமிக்கப்படும் நபர்களுக்கு அரசால் உரிய படி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது: மக்களவைத் தேர்தலுக்குச் சிறப்புக் காவலர்களாக முன்னாள் படைவீரர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். பாதுகாப்புப் பணியில் சிறப்புக் காவலர்களாகப் பணியாற்றுவதற்கு விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது விருப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04362 - 230104 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.