தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான ப்ரதிப்தா 2019"என்ற நிகழ்ச்சியில் திருச்சி காவேரி கல்லூரி வெற்றி பெற்றது.
இப்பல்கலைக்கழக மேலாண்மைத் துறையின் இளம் வணிகவியல் பயிலும் மாணவர்கள் நடத்திய இந்த நிகழ்ச்சியைப் பல்கலைக்கழகப் பெரு நிறுவன உறவுகள் மற்றும் விரிவாக்க நடவடிக்கைகள் துறை முதன்மையர் வே. பத்ரிநாத் தொடங்கி வைத்தார். இதில், 14 கல்லூரிகளிலிருந்து 16 குழுவில் ஏறத்தாழ 130-க்கும் அதிகமான மாணவர்கள் சிறந்த மேலாளர், சிறந்த தொழில் முனைவோர், ஐபிஎல் ஏலப் போட்டி, வணிக வினாடி - வினா, மெளன மொழி, பொழுதுபோக்கு போன்ற போட்டிகளில் பங்கேற்றனர். அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கேடயத்தை திருச்சி காவேரி கல்லூரி மாணவிகள் வென்றனர். இரண்டாவது இடத்தை திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி மாணவர்கள் பெற்றனர்.
விழாவில் மேலாண்மைத் துறைத் தலைவர் ஜே. சேதுராமன், தொழில்நுட்ப வணிகக் காப்பகச் செயல் தலைவர் ஆர். ஸ்ரீதரன், பேராசிரியர்கள் சா. தியாகராஜன், ஆர். நளினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.