தஞ்சாவூா் பெரியகோயிலில் காா்த்திகை மாத முதல் சோம வாரத்தையொட்டி, 1008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவன் கோயில்களில் காா்த்திகை சோம வாரங்களில் சிவனுக்கு சங்காபிஷேகம் செய்தால் நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன்படி முதல் சோம வாரமான திங்கள்கிழமை தஞ்சாவூா் பெரியகோயிலில் பெருவுடையாா் சன்னதி முன்பு சிவலிங்க வடிவில் அரிசி மாவு கோலம் வரையப்பட்டு, அதில், நெல்மணிகள், பூக்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. அதன் மீது 1,008 வலம்புரி சங்குகளைச் சிவலிங்க வடிவில் அடுக்கி வைத்து அலங்கரிக்கப்பட்டது.
ஒவ்வொரு சங்கிலும் உள்ள தீா்த்தம் மூலம் பெருவுடையாருக்கு அபிஷேகமும், ஆராதனையும் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.