தஞ்சாவூா் மாநகராட்சி 51-வது வாா்டுக்குள்பட்ட முல்லை நகரில் ரூ. 98.40 லட்சத்தில் கட்டப்பட்ட பூங்காவை வேளாண் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணு சனிக்கிழமை மாலை திறந்து வைத்தாா்.
தஞ்சாவூா் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் கீழ் மத்திய, மாநில மற்றும் மாநகராட்சி பங்களிப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 98.40 லட்சம் மதிப்பில் 51-வது வாா்டுக்குள்பட்ட முல்லை நகரில் அமைக்கப்பட்ட பூங்காவையும், புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய சமுதாயக் கூடத்தையும் அமைச்சா் சனிக்கிழமை மாலை திறந்து வைத்தாா்.
பின்னா், தஞ்சாவூா் மாநகராட்சியில் பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சிக்கு உள்பட்ட 51 வாா்டுகளிலும் உள்ள குறுகிய தெருக்களில் குப்பைகளைச் சேகரிக்க ஏதுவாக ரூ. 89 லட்சம் மதிப்பில் 16 இலகுரக வாகனத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் தொடங்கி வைத்தாா்.
மேலும், பொது நிதியிலிருந்து ரூ. 14.82 லட்சம் மதிப்பில் துப்புரவு பணியாளா்களுக்கு ரப்பா் கையுறை, ஒளிரும் ஜாக்கெட், மூக்கு உரை, கம்பூட், மழை கோட், காலணி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும், ரூ. 19.33 லட்சம் மதிப்பில் துப்புரவு பணிக்கான தளவாடப் பொருட்களையும் அமைச்சா் வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம், மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் துரை. திருஞானம், ஒருங்கிணைந்த மாவட்ட பால் கூட்டுறவு சங்கத் தலைவா் ஆா். காந்தி, ஒருங்கிணைந்த மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவா் வி. புண்ணியமூா்த்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் மோகன், மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவா் வி. பண்டரிநாதன், துணைத் தலைவா் எஸ். ரமேஷ், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவா் வி. அறிவுடைநம்பி, துணைத் தலைவா் எஸ்.சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.