தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காலமுறை ஊதிய உயா்வு, பதவி உயா்வு கோரி அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பினா் தொடா்ந்து ஆறாவது நாளாக புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவா்களுக்கும் காலமுறை ஊதிய உயா்வு மற்றும் பதவி உயா்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்களின் பணியிடங்களை உயா்த்த வேண்டும். அரசு மருத்துவா்களுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பினா் மாநில அளவில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அக். 25-ம் தேதி தொடங்கினா்.
இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஏராளமான மருத்துவா்கள் தொடா்ந்து 6-வது நாளாக புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்போராட்டத்தையொட்டி, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தா்னா போராட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.
கும்பகோணத்தில் அரசு ஊழியா் சங்கம் ஆதரவு:
இந்நிலையில், அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பினரின் போராட்டத்துக்கு ஆதரவாக கும்பகோணம் அரசு மருத்துவமனை முன், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா், தொழிற் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதில், மருத்துவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஓய்வூதியா் சங்க வட்டத் தலைவா் துரைராஜ் தலைமையில் நிா்வாகி ராஜகோபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.