தஞ்சாவூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 469 வழக்குகளுக்கு சுமார் ரூ. 2.50 கோடி அளவில் தீர்வு காணப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாகக் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் தலைமையில் நான்கு அமர்வுகள் அமைக்கப்பட்டன. இந்த மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட நீதிபதி வி. சிவஞானம் தொடங்கி வைத்தார்.
இதில், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி கே. கருணாநிதி, சிறப்பு மாவட்ட நீதிபதி ஆர். தங்கவேல், மகளிர் நீதிமன்ற நீதிபதி எம். எழிலரசி, கூடுதல் சிறப்பு நீதிபதி அண்ணாமலை, முதன்மைச் சார்பு நீதிபதி என்.எஸ். ஸ்ரீவத்சன், கூடுதல் சார்பு நீதிபதி சரவணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெ. அனிதா கிருஷ்டி, குற்றவியல் நீதித் துறை நடுவர்கள் ஏ. முகமது அலி, நளினகுமார், நீதித் துறை நடுவர் (விரைவு நீதிமன்றம்) பி. அல்லி ஆகியோர் 4 அமர்வுகளாக இருந்து விசாரணை செய்தனர். இதில், வழக்குரைஞர்கள், பொதுமக்கள் கலந்து
கொண்டனர்.
மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் இருந்த வழக்குகளில் 1,130 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் 469 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இவற்றில் 16 விபத்து இழப்பீடு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அனைத்து வழக்குகளிலும் ரூ. 79,32,171 இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
மேலும், மாவட்டம் மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாராக்கடன் தொகைக்கான 201 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அனைத்து வழக்குகளுக்கும் ரூ. ஒரு கோடியே 39 லட்சத்து 38 ஆயிரத்து 6 அளவில் தீர்வு காணப்பட்டது.
இந்த மக்கள் நீதிமன்றத்துக்கான பணிகளை மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான பி. சுதா ஒருங்கிணைத்து மேற்கொண்டார்.