பிரதமரின் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர 18-40 வயதுள்ள விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் (பொ) சா. சங்கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இத்திட்டத்தில் 18 முதல் 40 வயதுள்ள சிறு, குறு விவசாயிகள் மட்டும் சேர்க்கப்படுவர். இவர்கள் மாதாந்திர தவணையாக பிரீமியம் செலுத்த வேண்டும். வயதுக்கேற்ப விவசாயிகள் கட்ட வேண்டிய பிரீமியத் தொகையும் மாறுபடும். அதாவது, 18 வயது விவசாயி மாதம் ரூ.110-ம், 40 வயது விவசாயி மாதம் ரூ.400-ம் என பிரீமியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 50 சத தொகையை விவசாயிகளுக்காக மத்திய அரசு செலுத்தும்.
18-40 வயதுள்ள சிறு, குறு விவசாயிகள் 60 வயது வரையில் மாதாந்திர பிரீமியம் செலுத்த வேண்டும். இவ்வாறு தொகை செலுத்தும் சிறு, குறு விவசாயிகளுக்கு 60 வயதுக்கு மேல் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். இத்திட்டமானது தனிநபர் பயன்பெற அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒரே குடும்பத்தில் தகுதியுள்ள நபர்கள் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
பிரீமியம் செலுத்தி வரும் விவசாயி இறந்து விட்டால் அவரது மனைவி வாரிசுதாரர் என்ற வகையில் பிரீமியத் தொகை செலுத்துவதை தொடர்ந்து செலுத்தி வந்தால், அவர் ஓய்வூதிய தொகை பெற தகுதியுடையவராவார். ஒரு விவசாயிக்கு ஒரே ஒரு வாரிசு மட்டும்தான் தொடர முடியும். இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் தகுதியுடைய பட்டுக்கோட்டை வட்டார விவசாயிகள் அனைவரும் அருகிலுள்ள பொது இ-சேவை மையத்தில் தங்கள் ஆதார் அட்டையுடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.