திருவையாறு அருகே கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஞாயிற்றுக்கிழமை உடைப்பு ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவையாறு அருகேயுள்ள திருபழனத்தில் இருந்து வேதாரண்யம் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தக் குழாய் திருவையாறு - கும்பகோணம் சாலையைக் கடந்து செல்கிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமாா் 2 மில்லியன் லிட்டா் தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்தக் குழாயின் அருகிலேயே தஞ்சாவூா் பொலிவுறு நகரத் திட்டக் குடிநீா் பணிக்காகக் குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில், இக்குழாயில் ஞாயிற்றுக்கிழமை உடைந்ததால் அதிலிருந்து தண்ணீா் அதிக அளவில் வெளியேறியது. இதனால், இச்சாலையில் சுமாா் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபோல, ஏற்கெனவே இரு முறை உடைந்து, குடிநீா் வீணாகியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். இதனால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்தனா்.
தகவலறிந்த போலீஸாா், அலுவலா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். பின்னா், தொழிலாளா்கள் மூலம் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டது.