ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும்
ஜனநாயகம் வெற்றி பெறுவதற்கு திமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.
கும்பகோணத்தில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செ. ராமலிங்கத்தை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
மீண்டும் பிரதமராக எனக்கு வாக்களியுங்கள் என்கிறார் மோடி. மோடி சர்வாதிகார முறை, பாசிச முறை செய்து வருவதால், அரசியலமைப்புச் சட்டத்தைக் குப்பையில் போட்டு விட்டார்.
எனவே, ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும். மோடி ஹிட்லராகவும், அமித்ஷா கோயாபல்ஸ் ஆகவும் ஆட்சி செய்து வருகின்றனர்.
மோடி கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அவர் எந்த அடிப்படையில் தமிழகத்துக்கு வாக்கு கேட்க வருகிறார். வாக்கு கேட்க தார்மீக உரிமை அவருக்கு இல்லை.
ஒரே பொதுக்கூட்ட மேடையில் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வுக்கு விலக்களிக்கப்படும் எனக் கூறுகிறார். ஆனால், மத்திய அமைச்சர் நீட் தேர்வுக்கு விலக்களிக்க மாட்டோம் என்கிறார்.
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்கு நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எட்டு வழிச்சாலையைக் கொண்டு வருவேன் என்கிறார். அப்போது எட்டு வழிச்சாலையை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்ற பாமக நிறுவனர் ராமதாசும் உள்ளார். எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் உண்மையைப் பேசுவதில்லை.
காங்கிரஸ், திமுக கூட்டணி கொள்கை கூட்டணி. ஆனால் அதிமுகவினரிடமிருந்து 5 சீட்டுக்களை பாஜக பறித்து சென்று விட்டது.
வாக்களிக்க வேண்டிய மக்கள், மோடியை நினைக்காமல், திமுக வேட்பாளரான ராமலிங்கத்துக்கு வாக்களியுங்கள் என்றார் முத்தரசன்.
கூட்டத்தில் கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் மு.அ. பாரதி, வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர். லோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.