திருவையாறு அருகே பறக்கும் படையினர் திங்கள்கிழமை மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.16 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மக்களவை தேர்தலை முன்னிட்டு திருவையாறு சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் கலைச்செல்வி தலைமையில் உதவி ஆய்வாளர் சேகர், தலைமைக் காவலர் பிரான்சிஸ் ஈச்சங்குடி பிரதான சாலையில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் சோதனையிட்டனர். அவரிடம் ரூ. 1,16,030 ரொக்கம் இருந்தது. ஆனால், அதற்கான ஆவணம் அவரிடம் இல்லை. எனவே, அத்தொகையைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திருவையாறு சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.