பேராவூரணி வேளாண்மை கோட்டத்தில் 100 சத மானியத்தில் வழங்கப்படும் சொட்டு நீர் பாசன கருவிகளை பெற்று பயனடையுமாறு பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் எஸ். மாலதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பேராவூரணி வட்டத்தில் சுமார் 6250 ஹெக்டேரில் தென்னையும், 500 ஹெக்டேரில் நிலக்கடலையும், 200 ஹெக்டேரில் உளுந்து பயிரும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மேற்கண்ட பயிர்களுக்கு நீர்மேலாண்மை மேற்கொள்ள சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனமே சிறந்த முறையாகும். சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் விரயமாகாமல், பயிரின் வேர் பகுதிக்கு நேரிடையாக வழங்கபடுவதால் குறைந்த நீர் தேவையே போதுமானது. மேலும், கரையும் உரங்களையும் பயிருக்கு நேரிடையாக வழங்க இயலும். தென்னை, எண்ணெய் பனை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்திட சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சத மானியத்திலும் வேளாண்துறை மூலம் சொட்டுநீர் பாசன கருவிகள் சிறந்த நிறுவனங்கள் மூலம் அமைத்து தரப்படுகிறது. சொட்டுநீர் பாசனத்தின் மூலம் மட்டுமே தென்னை மரங்களை வறட்சியின் பிடியில் இருந்து காப்பாற்ற முடியும். எனவே, பேராவூரணி பகுதியில் ஆர்வமுள்ள விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், நில வரைபடம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு, ரேசன்கார்டு, சிறு குறு விவசாயிகள் சான்று ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலரையோ அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம் என
தெரிவித்துள்ளார்.