கட்செவி அஞ்சலில் ஒரு சமூகம் குறித்து அவதூறு பரப்பியவர்களைக் கண்டித்தும், அதை வெளியிட்டவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும், தஞ்சை-ஒரத்தநாடு சாலையில் தென்னமநாடு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள ஒரு சமூகத்தினர் குறித்து தவறாகச் சித்தரிக்கப்பட்ட தகவல் கட்செவியில் பதிவிட்டு, பரப்பப்பட்டுள்ளதைக் கண்டித்து, பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கட்செவி அஞ்சலில் அவதூறு பரப்பியவர்களைக் கண்டித்தும், அதை வெளியிட்டவர்களைக் கைது செய்து, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் தஞ்சாவூர் - ஒரத்தநாடு சாலையில் தென்னமநாடு கிராமத்தில் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.