கும்பகோணம் அருகே சிறுமிக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
கும்பகோணம் அருகே ஆடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்நிலையில் மணப்பெண்ணுக்கு 14 வயதுதான் என்பது குறித்து சைல்டு லைன் அமைப்புக்கு வெள்ளிக்கிழமை புகார் சென்றது.
இதன் பேரில், சைல்டு லைன் பணியாளர்கள், சமூக நலத் துறை அலுவலர்கள், போலீஸார் ஆகியோர் ஆடுதுறை அருகேயுள்ள கிராமத்துக்குச் சென்று மணமக்களின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். இதில், மணப்பெண் 2005 ஆம் ஆண்டு பிறந்தவர் என்பதும், 10-ம் வகுப்பு படித்து வருவதும் தெரிய வந்தது. எனவே, சிறுமிக்கு தற்போது திருமணம் செய்யக் கூடாது என பெண் வீட்டாரிடம் அலுவலர்கள் அறிவுறுத்தினர். இதை ஏற்றுக் கொண்ட பெண் வீட்டார் எழுத்துபூர்வமாகவும் உறுதி அளித்தனர்.