பட்டுக்கோட்டை அருகே மகாராஜசமுத்திரம் பெரிய ஏரியில் தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், ரூ. 28 லட்சம் செலவில் 4 மதகுகள், வரத்துக் கால்வாய் மற்றும் பாசனக் கால்வாய் கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்குமாறும், அடிக்கடி பணிகளை ஆய்வு செய்ய வேண்டுமெனவும் தொடர்புடைய அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் அன்பழகன், சண்முகவேல், தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மைத்துறை துணை இயக்குநர் ஜஸ்டின் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் உடனிருந்தனர்.