திருவையாறில் இரு வீடுகளில் பூட்டை உடைத்து நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவையாறு ராஜா நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் அனந்தவைத்தியநாதன் மகன் சிவக்குமார். இவர் ஆக. 9-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு நண்பர்களுடன் சுற்றுலா சென்றார். இந்நிலையில், இவரது வீட்டின் முன்பக்கக் கதவு செவ்வாய்க்கிழமை உடைக்கப்பட்டுக் கிடந்தது. தகவலறிந்து ஊருக்குத் திரும்பிய சிவக்குமார் உள்ளே சென்று பார்த்தபோது, ரூ. 5,000 ரொக்கம், 5 பவுன் தங்க நகைகள், வைர மோதிரம், 60 கிராம் வெள்ளிப் பொருட்கள் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதேபோல, அதே தெருவைச் சேர்ந்த சீதாராமன் வீட்டின் பின்புறக் கதவையும் மர்ம நபர்கள் உடைத்து ரூ. 25,000 ரொக்கம், வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து திருவையாறு போலீஸார் விசாரிக்கின்றனர்.