பேராவூரணியில் கைஃபா அமைப்பின் சார்பில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
"பேராவூரணி கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் (கைஃபா) ' என்ற அமைப்பை ஏற்படுத்தி 565 ஏக்கர் பரப்பளவு கொண்ட பேராவூரணி பெரியகுளத்தை பொதுமக்களிடம் நன்கொடை பெற்று இளைஞர்கள் தூர்வாரி வருகின்றனர்.
இப்பணி தொடங்கி ஐம்பது நாள்கள் ஆவதை முன்னிட்டு நீர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத் தலைவர் ராம்குமார் தலைமை வகித்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் என். அசோக்குமார் முன்னிலை வகித்தார். பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் ஜெயபால் பேரணியை தொடங்கி வைத்தார்.
பேரணியானது, பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, சேதுபாவாசத்திரம் சாலை, ஆவணம் சாலை வழியாக பெரியகுளம் சென்றடைந்தது.
பேரணியில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு பதாதைகளை கையில் ஏந்தியபடி மாணவர்கள் நீர் மேலாண்மை குறித்து முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர். பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பேரணியில் தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் ஜி.ஆர். ஸ்ரீதர், பேரூராட்சி செயல் அலுவலர் மு.மணிமொழியன், தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம், பொன்காடு, பழைய பேராவூரணி கிராம மக்கள், பேராவூரணி, குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி, மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டாக்டர். ஜே.ஸி. குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
பேரணிக்கான ஏற்பாடுகளை கைபா சங்க நிர்வாகிகள் ஏ. நவீன், நிமல்ராகவன், எஸ். திருவேங்கடம், தங்ககண்ணன், வே.கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.