போக்குவரத்துக் கழக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தல்

போக்குவரத்து கழகத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது.

போக்குவரத்து கழகத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது.
 இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் சங்க ஏஐடியூசி நிர்வாகிகள் துரை. மதிவாணன், சுந்தரபாண்டியன், ராஜா, கஸ்தூரி, தாமரைச்செல்வன், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சங்கப் பொதுச் செயலர் பி. அப்பாதுரை ஆகியோர் போக்குவரத்துத் துறை அமைச்சர், போக்குவரத்துத் துறைச் செயலர், தொழிலாளர் ஆணையர், போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட முதன்மை இயக்குனர், பொது மேலாளர் ஆகியோருக்கு 62 கோரிக்கைகள் அடங்கிய ஒப்பந்த கோரிக்கை பட்டியலை தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் புதன்கிழமை பதிவு அஞ்சலில் அனுப்பினர். அதில், தெரிவித்திருப்பதாவது:
 போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 1977-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஊதியம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு பேசப்பட்ட 13-வது ஊதிய ஒப்பந்தம் ஆக. 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. செப்டம்பர் முதல் 14-வது ஊதிய ஒப்பந்தம் புதிய ஊதியத்துடன் அமல்படுத்தப்பட வேண்டும்.
 இதற்கான பேச்சுவார்த்தைக்காக அனைத்து தொழிற்சங்கங்களையும் தமிழகஅரசு அழைத்து பேசி உரிய காலத்தில் ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும். 14-வது ஊதிய ஒப்பந்தம் பேசுவதற்கு முன்பு கடந்த ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகளைக் களைந்து ஒரு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படாமல் உள்ளதை உடனே வழங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண ஆண்டுதோறும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்வதுடன், அன்றாடம் வரவுக்கும், செலவுக்குமான இடைவெளி பற்றாக்குறையை அரசே ஈடு செய்ய வேண்டும். ஊதிய உயர்வாக 50 சதவீதம் அளித்து குறைந்தபட்ச மாத ஊதியத்தை ரூ. 24,000 உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com