தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையைத் திரும்ப பெற வேண்டும் என்றார் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநிலச் செயலர் சீ. தினேஷ்.
தஞ்சாவூர் கீழ ராஜவீதியில் உள்ள ஏஐடியுசி கூட்டரங்கில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கை குறித்த கருத்தரங்கத்தில் அவர் மேலும் பேசியது:
புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவை மத்திய அரசு வெளியிட்ட நாளில் இருந்தே, தமிழகத்தில் கல்வியாளர்களும், மாணவர், இளைஞர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் உள்பட பல்வேறு இயக்கங்களும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் இந்தி திணிப்பு தொடங்கி புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு விஷயங்கள் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராகவே உள்ளன. சர்வதேச சந்தைக்குக் கல்வியைத் திறந்து விடுவதற்கான ஓர் ஒப்புதல் ஆவணமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்றார் தினேஷ்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் ஆர்.ஆர். முகில், மாவட்டத் தலைவர் வா. இளையராஜா தலைமை வகித்தனர். மாநிலத் துணைச் செயலர் துரை. அருள்ராஜன், மாணவர் பெருமன்ற மாவட்டச் செயலர் சி. செந்தூர்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.