தஞ்சாவூர் அருகே டாஸ்மாக் கடையில் பணியாளர்களிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி ரூ. 4.70 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் விளார் சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இதில், தஞ்சாவூர் டவுன் கரம்பையைச் சேர்ந்த டி. சிவக்குமார் (43) விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
இக்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பணி நேரம் முடிந்த பிறகு விற்பனையான தொகையை சிவகுமார் எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் பக்கவாட்டில் உள்ள கதவை திறந்துகொண்டு முகத்தைக் கைக்குட்டையால் மறைத்தவாறு உள்ளே புகுந்தனர். சிவகுமாரிடம் அரிவாளை காட்டி மிரட்டி ரூ. 4.70 லட்சத்தை பறித்தனர்.
மேலும் வெளியே இருந்த கண்காணிப்பு கேமராவையும் சேதப்படுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். தகவலறிந்த தஞ்சாவூர் தாலுகா போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.