தஞ்சாவூர் அருகேயுள்ள அம்மாபேட்டை பகுதி நல்லவன்னியன் குடிகாடு நத்தம் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் மகன் பிரபாத் (29). இவர் 2010, ஏப். 22-ம் தேதி மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, செண்பகபுரம் சண்முகநாதன் நகரைச் சேர்ந்த செல்வம் மகன் சுரேஷ் (34) சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சுரேஷை பிரபாத் முந்தி சென்றார். இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், பிரபாத்தை சுரேஷ் அரிவாளால் வெட்டினார். இதில் பிரபாத் பலத்தக் காயமடைந்தார்.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த சுரேஷை 2018 ஆம் ஆண்டில் கைது செய்தனர். இதுதொடர்பாக கும்பகோணம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி அய்யப்பன் பிள்ளை விசாரித்து, சுரேஷுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.