ஒரத்தநாடு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு பெண்கள் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில், உலகத் தாய்மொழி நாளைக் கொண்டாடும் வகையில் செவ்வாய்க்கிழமை கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
கருத்தரங்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தே. மலர்விழி தலைமை வகித்தார். மதுரை டோக் பெருமாட்டிக் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் சேதுமணி மணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நாம் ஏன் தமிழைக் காக்க வேண்டும்? என்னும் பொருண்மையில் பேசியது:
தமிழ்மொழி காலத்தாலும், அரசியல் சூழ்ச்சிகளாலும் அழிக்க முடியாத உலகின் தொன்மையான மொழி. அது மானுட உயிர்ப்பு மொழி என்று உணர்ந்து நாம் தமிழைக் காக்க வேண்டும்; அவ்வாறு காத்தால் தமிழ் நம்மைக் காக்கும் என்றார்.
தமிழ்த் துறை மாணவியர்கள் திரளாக கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், உலகத் தாய்மொழி நாள் குறித்தும் தமிழக மொழிப்போராட்டங்கள் குறித்தும் பல்வேறு கருத்துகள் விளக்கப்பட்டன. நிகழ்ச்சியை தமிழ்த்துறை ஆசிரியர் ப. இராஜராஜேஸ்வரி தொகுத்து வழங்கினார்.
முன்னதாக, தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் சு. ஜெயசீலா வரவேற்றார். நிறைவில், தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் தே.வீ. சுமதி நன்றி கூறினார்.