தஞ்சாவூர் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் புஷ்பமாலா கலை விழா பிப். 21-ம் தேதி தொடங்கி தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற்றது.
இதில், நாட்டுப்புற நடனம், கர்நாடக இசை, மேற்கத்திய நடனம், பரதநாட்டியம், நாடகம், மெல்லிசை, பலகுரல், ஆடை அலங்காரம், இசைக்கருவி வாசித்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. 20 கல்லூரிகள், 3 பல்கலைகழகங்களைச் சேர்ந்த 285 மாணவ, மாணவிகள் கலைவிழாவில் பங்கேற்றனர். இப்போட்டிகளில் ஒட்டுமொத்தமாக திருச்சி தூய வளனார் கல்லூரி முதலிடம் பெற்றது. சனிக்கிழமை மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்குக் கல்லூரிச் செயலரும், தாளாளருமான கி. துளசிஅய்யா வாண்டையார் தலைமை வகித்தார். திரைப்பட நடிகர்கள் காளி வெங்கட், மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி, கோவை அசோக் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் து. கிருஷ்ணசாமி வாண்டையார், கி. ராமநாத துளசிஅய்யா வாண்டையார், மதுரை ம.அ. ராமசாமி பிரவீன், கல்லூரி முதல்வர் ஆர். வெங்கடாசலம், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கோ. கரிகாலன், அறிவியல் புலத் தலைவர் வி. எஸ். நாகரத்தினம், அலுவலக மேலாளர் எஸ். துரைராஜ், கவின் கலை மன்றத் துணைத் தலைவர் என்.சிவாஜி கபிலன், கவின் கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் சி. மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.