மாநில அரசின் ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த சங்கத்தின் 20 ஆம் ஆண்டு விழா மற்றும் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
ஊராட்சிகளில் எழுத்தராகப் பணியாற்றி 2003 ஆம் ஆண்டுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவர்களுக்கு ஊராட்சி எழுத்தராகப் பணியாற்றிய காலத்தில் 50 சதவீத பணிக்காலத்தைப் பொதுவான ஆணையில் ஓய்வூதியத்துக்கு எடுத்துக்கொண்டு அரசாணைப் பிறப்பிக்க வேண்டும்.
மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படுவதுபோல, மாநில அரசின் ஓய்வூதியர்களுக்கும் ஆயிரம் ரூபாய் மருத்துவப்படியாக வழங்க வேண்டும்.
ஓய்வூதியர்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முழுமையாகப் பயனடையும் வகையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை மாற்றி முழு மருத்துவச் செலவையும் ஏற்க உரிய ஆணைப் பிறப்பிக்க வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் மு. சம்பந்தம் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஆ. மணிவண்ணன், மாவட்டச் செயலர் சு. சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.